எழுத்து
(சார்பெழுத்துகள் : ஐகார, ஔகார, மகர, ஆய்தக் குறுக்கங்கள்)
உயிர் பன்னிரண்டும், மெய் பதினெட்டும் ஆக முப்பது எழுத்துகளை முதலெழுத்துகள் எனவும், அவற்றைச் சார்ந்து வரும் எழுத்துகளைச் சார்பெழுத்துகள் எனவும் முன் வகுப்புகளில் கற்றறிந்தோம்.
1. ஐகாரக்குறுக்கம்
'ஐ' என்னும் நெட்டெழுத்தைத் தனியாக ஒலித்துப் பாருங்கள். அது, தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறையாமல் ஒலிக்கும். ஆனால், இவ்வெழுத்தைச் (ஐ) சொல்லின் முதலிலும் இடையிலும் ஈற்றிலும் வருமாறு எழுதி ஒலித்துப் பாருங்கள். அஃது, ஒலி குறைந்து ஒலிப்பதனை உணர்வீர்.
| சொல் | இடம் | விளக்கம் |
|---|---|---|
| ஐம்பது | சொல்லுக்கு முதலில் | ஒன்றரை மாத்திரையாகக் குறைந்தது |
| தலைவன் | சொல்லுக்கு இடையில் | ஒரு மாத்திரையாகக் குறைந்தது |
| கடலை | சொல்லுக்கு ஈற்றில் | ஒரு மாத்திரையாகக் குறைந்தது |
இவ்வாறு சொல்லுக்கு முதல், இடை, கடை ஆகிய மூவிடங்களில் வரும் ஐகாரம் தன் மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம் ஐகாரக்குறுக்கம் எனப்படும்.
2. ஔகாரக்குறுக்கம்
'ஔ' என்னும் நெடில் எழுத்தும், 'ஐ' என்னும் நெட்டெழுத்தைப்போலவே தனியாக ஒலிக்கும்போது, இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிப்பதில்லை. ஆனால், சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஔகாரம் ஒன்றரை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும். அதுவே ஔகாரக்குறுக்கம் எனப்படும்.
எடுத்துக்காட்டு: ஔவை, வெளவால் – ஒன்றரை மாத்திரையாகக் குறைந்தது.
⚠️ முக்கிய குறிப்பு: சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் ஔகாரம் வாராது.
3. மகரக்குறுக்கம்
'ம்' என்னும் மெய்யெழுத்து தன் மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலித்தல் மகரக்குறுக்கம் எனப்படும். அதாவது, 'ம்' என்னும் மெய்யெழுத்து, செய்யுளில் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து, கால் மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும்.
எடுத்துக்காட்டு:
- போலும் → போல்ம் → போன்ம்
- மருளும் → மருள்ம் → மருண்ம்
மகரம் குறுகும் இடங்கள்:
- செய்யுளில் இடம்பெறும் போலும், மருளும் ஆகிய மகர ஈற்றுச் சொற்கள், ஈற்றயல் உகரங் கெட்டு, போல்ம், மருள்ம் என்றாகிப் பின் போன்ம், மருண்ம் எனத் திரியும். இவ்வாறு திரியும் னகர, ணகரங்களின் முன்னுள்ள மகரம், தன் அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கும்.
- மகர ஈற்றுச்சொல் முன் வகர (வ்) முதல்மொழி வந்து சேரும்போது, நிலைமொழி மகரம் குறைந்து ஒலிக்கும்.
எடுத்துக்காட்டு: வரும் + வண்டி = வரும் வண்டி. 'ம்' தன் அரை மாத்திரையிலிருந்து குறைந்து, கால் மாத்திரையாக ஒலிக்கும்.
இவ்விரண்டு இடங்களிலும் குறைந்து ஒலிக்கும் மகரமே மகரக்குறுக்கம் எனப்படும்.
4. ஆய்தக்குறுக்கம்
ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக்குறுக்கம். ('ஃ' என்னும் எழுத்து குறைந்து ஒலிப்பது.)
நிலைமொழியில் தனிக்குறிலை அடுத்து வரும் லகர, ளகரங்கள் வருமொழியிலுள்ள தகரத்தோடு (த்) சேரும்போது ஆய்தமாகத் திரியும். இவ்வாறு திரிந்த ஆய்தம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவாக ஒலிக்கும். அதுவே ஆய்தக்குறுக்கம் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
- கல் + தீது = கஃறீது
- முள் + தீது = முஃடீது
பிறகு, வருமொழியிலுள்ள தகரம் (த்) நிலைமொழிக்கேற்ப றகரமாக (ற்) வும், டகரமாகவும் (ட்) மாறிப் புணரும்.
சொற்றொடர் வகைகள்
1. செய்தித்தொடர்
ஒரு கருத்தைச் செய்தியாகத் தெரிவிப்பது செய்தித்தொடர் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
- பரிதிமாற் கலைஞர் மதுரைக்கருகில் உள்ள விளாச்சேரியில் பிறந்தார்.
- திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
2. வினாத்தொடர்
வினாப்பொருளைத் தரும் தொடர், வினாத்தொடர் எனப்படும். என்ன? எங்கே? எப்படி? ஏன்? முதலிய வினாச்சொற்கள் வினாத்தொடரில் அமையும்.
எடுத்துக்காட்டு: எழில், என்ன சாப்பிட்டாய்? அன்பரசி, நேற்று நீ ஏன் பள்ளிக்கு வரவில்லை?
3. உணர்ச்சித்தொடர்
மகிழ்ச்சி, வியப்பு, துன்பம் முதலிய உணர்ச்சிகள் வெளிப்படுமாறு அமைவது, உணர்ச்சித் தொடர்.
எடுத்துக்காட்டு: என்னே, இமயமலையின் உயரம்!
4. கட்டளைத்தொடர்
ஒரு செயல் அல்லது சில செயல்களைப் பின்பற்றும்படி ஆணையிட்டுக் கூறுவது, கட்டளைத்தொடர்.
எடுத்துக்காட்டு: பார்த்துப் போ, கவனமாகப் படி.
5. தனிநிலைத்தொடர்
ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டுமுடிவது, தனிநிலைத்தொடர்.
எடுத்துக்காட்டு:
- அழகன் பாடம் எழுதுகிறான்.
- மா, பலா, வாழை ஆகியன முக்கனிகள்.
6. தொடர்நிலைத்தொடர்
ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது தொடர்நிலைத்தொடர். தொடர்நிலைத்தொடர்கள் அதனால், ஆகையால், ஏனெனில் முதலிய இணைப்புச்சொற்களைப் பெற்று வரும்.
எடுத்துக்காட்டு: கார்மேகம் கடுமையாக உழைத்தார்; அதனால், வாழ்வில் உயர்ந்தார்.
7. கலவைத்தொடர்
ஒரு தனிச்சொற்றொடர் ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட துணைத் தொடர்களுடன் கலந்து வருவது, கலவைத்தொடர்.
எடுத்துக்காட்டு: நேற்று புயல் வீசியதால், பள்ளிக்கு விடுமுறை.
8. செய்வினைத்தொடர்
எழுவாய், செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர் செய்வினைத்தொடர் எனப்படும். செயப்படுபொருளோடு இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) வெளிப்பட்டு வரும்.
எடுத்துக்காட்டு: குடியரசுத் தலைவர் உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.
9. செயப்பாட்டு வினைத்தொடர்
செயப்படுபொருள் வினைச்சொல்லைக் கொண்டு முடிவது. 'ஆல்' என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் உள்ளது. பயனிலையில் படு, பட்டது, பெறு, பெற்றது என்னும் துணைவினைகளுள் ஒன்று சேர்ந்து வரும்.
எடுத்துக்காட்டு: உலகத்தமிழ் மாநாடு குடியரசத் தலைவரால் தொடங்கி வைக்கப்பெற்றது.
10. தன்வினைத்தொடர்
எழுவாய், ஒரு செயலைத் தானே செய்தல் உணர்த்துவது. எடுத்துக்காட்டு: பாத்திமா திருக்குறள் கற்றாள்.
11. பிறவினைத்தொடர்
எழுவாய், ஒரு செயலைப் பிறரைக்கொண்டு செய்விப்பது. எடுத்துக்காட்டு: பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்.
12. நேர்கூற்றுத்தொடர்
ஒருவர் பேசுவதை, அவர் பேசியபடியே கூறுவது. மேற்கோள் குறிகள் இடம்பெறும்; தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும்.
எடுத்துக்காட்டு: "நான், நாளை மதுரைக்குச் செல்வேன்" என்றாள்.
13. அயற்கூற்றுத்தொடர்
ஒருவர் அல்லது பலரின் உரையாடல்களை அயலார் கூறுவதுபோல் அமைப்பது, அயற்கூற்றுத்தொடர்.
எடுத்துக்காட்டு: பொன்னியிடம் தேன்மொழி, தான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள்.
14. உடன்பாட்டுத்தொடர்
செயல் அல்லது தொழில் நிகழ்வதை நேர்மறையாக உணர்த்துவது, உடன்பாட்டுத் தொடர்.
எடுத்துக்காட்டு: கலைச்செல்வி கட்டுரை எழுதினாள்.
15. எதிர்மறைத்தொடர்
செயல் நிகழவில்லை எனச் செயல் நிகழாமையைக் கூறுவதனால், இஃது எதிர்மறைத்தொடர்.
எடுத்துக்காட்டு: கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்.
16. பொருள்மாறா எதிர்மறைத்தொடர்
உடன்பாட்டுத்தொடரை பொருள்மாறா எதிர்மறைத்தொடராக மாற்ற வேண்டுமானால், அதனை இரண்டு எதிர்மறைகளைக்கொண்ட தொடராகக் மாற்றுதல்வேண்டும். இதற்குக் கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் என்பதே பொருள் என்பதனால், இது பொருள்மாறா எதிர்மறைத்தொடர் எனப்படுகிறது.
எடுத்துக்காட்டு: கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்.
இரண்டு எதிர்மறைச்சொற்கள் சேர்ந்து வந்தால், அஃது உடன்பாட்டுப் பொருளைத் தரும்.